கிறுக்கல்......என்னுள் உதித்த முதல் தமிழ் வார்த்தை..எழுத வேண்டும் என தோற்றிய கணத்தில். அமெரிக்க வாழ்கை அலுத்து போக துவங்கிய நேரத்தில். தமிழில் எழுதுகிறேன்...மூன்று வருடங்களுக்கு பிறகு. இது எவ்வளவு தூரம் வரையில்? தெரியவில்லை...அநேகமாக...தமிழ் வார்த்தகளை ஆங்கிலத்தில் எழுதுவது சிரமமாக தோன்றும் வரையிலுமாக இருக்கலாம். அல்லது, ஆங்கிலத்தில் சொல்வது போல, 'passing fancy', என்னை விடும் வரையிலுமாக இருக்கலாம். இல்லையேல், ஒர்லாண்டோ சென்று இருக்கும் எனது மேனேஜர் திரும்பி வரும் வரையிலுமாக இருக்கலாம்.
எழுத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வம் விலகியது எப்படி? இது தான் என எதையும் உறுதியாக கூற முடியவில்லை. ஆனால், எனக்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வம் பற்றி கடைசியாக யாரிடம் பேசினேன் என நினைவுள்ளது.
ஒரு சராசரி மத்திய வர்க்க குடும்பத்தில்இருக்கும் அனைத்து பிரச்சனைகளோடும், கனவுகளோடும், உந்துதலோடும், B.tech முடித்துவிட்டு, 'இனி என்ன ?' என்ற கேள்வியோடு போராடிகொண்டிருந்த நேரம். நண்பர்கள் அனைவரும் கணினி துறையில் நல்ல வேளையில் அமர்ந்திருக்க, நான் மட்டும் திட்டவட்டமாக கணினி என்னுடைய துறை அல்ல என எனது பெற்றோரை சமாதான படுத்த முயற்சித்து கொண்டிருந்தேன். நிர்வாகவியல் படிப்புக்கு விண்ணப்பம் அனுப்பி கொண்டிருந்தேன்....முழு விருப்பமில்லாமல். சுமாரான சில கல்லூரிகளில் அனுமதியும் கிடைத்தது. அதிலும் மனம் விருப்பம் இல்லாமல் தத்தளித்தது. முடிவெடுப்பதில் அநேகமாக எந்த சிரமமும் இருந்ததில்லை எப்போதும். இப்பொழுது எடுக்கும் முடிவு எனது வாழ்கையை திசை திருப்பி விடும் என்று தெரிந்தபோது சற்று யோசித்தேன். பனி விலகியதும் தெரியும் பாதை போல..ஏதோ ஒன்று இந்த பணியை விரைவில் விளக்கும் என்ற நம்பிக்கையோடு காத்து இருந்தேன். உயிர் தொழில்நுட்ப துறையில் இருந்த ஆர்வம் சில வழிகளை ஆராய தூண்டியது. வேலை தரக்கூடிய மேற்படிப்பு பற்றி ஆராய ஆரம்பித்தேன் (கல்வி கடன் ஒரு பக்கம் பயம் தர தொடங்கி இருந்தது).
எல்லா வற்றிற்றிகும் மேலாக, மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் பழையபடி தலை தூக்க தொடங்கியது. அப்படி நினைத்து தான் மருத்துவ பொறியியல் துறையை படித்தேன். அனைத்து தோழிகளின் கேலிக்கும் ஆளானேன். முட்டாள், வாழ தெரியாதவள் என சில பட்டங்கள். இது என்ன புது படிப்பு என ஆச்சர்யகுறியோடு சில முகங்கள். எல்லாவற்றையும் உதாசீன படுத்திவிட்டு படிப்பை தொடர்ந்தேன். பலப்பல கேள்விகள் என் உறுதியை குலைக்க ஆரம்பித்தன. இந்தியாவில் இந்த படிப்புக்கு வேலை பெரிதாக ஒன்றும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. உடன் படித்த அனைவரும் கணினி துறை தான் என மனதை தயார் படுத்திகொண்டிருகையில், நான் மட்டும் இந்த துறையில் மேலே செல்வது எப்படி என யோசித்து கொண்டிருந்தேன்.
நண்பர்கள் சிலர் வெளிநாடுகளில் படிக்க முயற்சித்து கொண்டிருந்தார்கள். நானும் செல்ல நினைத்தேன்...ஆனால் வீட்டில் நிலவரம் ஒன்றும் பெரிதாக இல்லை. படிப்பு செலவுகளை சமாளிக்க முடியுமா என தெரியவில்லை. அம்மா ஒரு நாள், ச'வின் ஒன்று விட்ட தம்பி ஜெர்மனியில் மேற்படிப்பை தொடர்ந்தான் என கேள்வி பட்டேன். பேசித்தான் பாரேன் என்றார். அம்மாவுக்கு என் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. நானும் மின்னஞ்சல் வழியாக பேச ஆரம்பித்தேன்...கே'விடம்.
முதலில், ஆச்சரியத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தார். வெளிநாட்டில் படிக்க உனக்கு எப்படி தோன்றியது எனகேட்டார். பல காரணங்களை அடுக்கினேன். எனது ஆர்வத்தையும் , தயக்கத்தையும் புரிந்து கொண்டார். முழு கவனத்தையும் நுழைவு தேர்வில் செலுத்து என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல், படிக்க புத்தகங்களையும் அனுப்பினார். அதற்குமேல் யோசிக்க ஒன்றுமில்லாமல், படிக்க ஆரம்பித்தேன். உடன் எங்கள் நட்பும் வளர்ந்தது. ஒரு ஆசானுக்குரிய மரியாதையோடு பழக ஆரம்பித்தேன். மெல்ல அவருக்கு என்மீது இருந்த ஆர்வம் புரிந்தது. இருபத்தியொரு வயதில் இதை பற்றி என்ன சிந்தனை என அந்த வழியில் நட்பை ஊக்க படுத்தாமல் பழகினேன். ஆனால் எனது பெற்றோரின் விருப்பமும் அவருடைய விருப்பமும் ஒன்றாகவே இருந்தது. அவருடைய அம்மாவும் இதில் விருப்பம் காட்ட ஆரம்பித்திருந்தார். அநேகமாக முடிவு செய்து விட்டார்கள் என்ற நிலையில் நானும் அதை ஏற்று கொள்ள ஆரம்பித்தேன். அப்பொழுது ஒரு முறை எழுத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை அவரிடம் சொன்னேன்....அது தான் கடைசி முறையாக நான் எழுத்தை பற்றி பேசியது....
மூன்று வருடங்களுக்கு பிறகு அவரை சந்திக்க நேர்ந்தது....அவரது மனைவியுடன். மறுபடியும் கேட்டார்....எப்படி வெளிநாட்டில் படிக்கவேண்டுமென உனக்கு தோன்றியது?
No comments:
Post a Comment