Sunday, September 14, 2014

மற்றுமோர் குடும்பம்

லாஸ் ஆன்ஜெலேஸ் விமான நிலயத்தில் இரு தோழிகளுடன் காலடி வைத்தேன்.  நெருங்கிய தோழிகள் என சொல்லி விட முடியாது.  'சோசியல் நெட்வொர்கிங்' என சொல்லப்படும் ஒரு இணைய தளத்தில் எங்கள் அறிமுகம் நிகழ்ந்தது-சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 30 மணிநேரத்திற்கு முன்பு நேரில் சந்தித்த நட்பு.  இன்னும் சரியான புரிதலும், நம்பிக்கையும் தொடங்காத நிலை.  நான்சி- சற்று நவீனமாகத் தெரிந்தாள்.  மென்மையான பேச்சும், ஒட்ட வைத்த புன்னகையும் எவரையும் வசீகரிக்கும் கட்டுக்கோப்பான உடற்கட்டும் என்னை மட்டும் ஏனோ வசீகரிக்கவில்லை.  'லிசர்ட் பிரைன்' என சொல்லப்படும் பரிணாம வளர்ச்சியில் அதிகம் மாற்றம் காணாத மூளையின் பகுதி என்னை எச்சரித்தது- சற்று கவனமாய் இரு என.  மித்ரா- வசதியான குடும்பத்து பெண் என தோற்றமே  தெரிவித்தது.  அவளது பேச்சும் அதை மறைக்க முயலவில்லை.  பார்த்த நிமிடமே நட்புறவு கொண்டாடினாலும், பேச்சில் இருந்த ஆளுமைத்தன்மையும், அழைப்பின்றி உள்ளே புகும் தன்மையும் சற்று ஆயாசத்தை ஏற்படுத்தியது.  உறவுகளைப் பிரியும் நேரம் வந்தவுடன் மற்ற இருவரும் அழுதனர்.  எனக்கு அழுகை வரவில்லை, என்னவென்றே புரியாத மனநிலையுடன் கிளம்பினேன்.

குளிரூட்டப்பட்ட அறையில் கண்ணாடியின் பின்னால் இருந்த immigration officer எங்கள் ஆவணங்களை சரி பார்த்த பின் அனுப்பினார்.  எங்கள் பல்கலைக்கழகம் அனுப்பிய நபர் அழைத்துசெல்ல தாமதமாக வந்தார், மன்னிப்பு கோரிக்கொண்டே.  பல்கலைக்கழகம்  செல்லும் வழியில் LA நகரம் பற்றிய அவரது வர்ணனைகள் அழகாக இருந்தது, ஆனால் நகரம் அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை.  பாலைவனம் போல் காட்சியளித்த சாலையோரங்கள் ஊரின் பொட்டல்காட்டை நினைவுபடுத்தியது.  தமிழ் படங்களில் காட்டப்பட்ட மேற்கு நாடுகளின் அழகை நேரில் பார்க்க முடியவில்லை.

பல்கலைக்கழகத்தை நெருங்கிய பொது சில மரங்களையும், சீராக வெட்டப்பட்ட செடிகளையும் காண முடிந்தது.  ஆனால் அதிலும் ஒரு செயற்கைத்தன்மையே தெரிந்தது.  வெளிநாட்டு மாணவர்கள் புது வாழ்க்கைமுறையை சிரமம் இன்றி கற்றுக்கொள்ள ஒரு அமைப்பு இயங்கி வந்தது.  அமைப்பின் நிறுவனர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களின் இனிய வரவேற்பு சற்று ஆசுவாசுபடுத்திக்கொள்ள உதவியது, சில நாட்களுக்கு.  பின்பு படிப்பின்  சுமை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அந்த அமைப்பில் எங்கள் பங்கேற்பு  படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

முதல் வருடம் உடன் வந்த தோழிகளுடன், பல்கலைக்கழத்தில் இருந்து நடக்கும் தூரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்க ஆரம்பித்தோம்.   வீட்டில் குடியேறிய இரண்டாம் நாளில் இருந்து எங்கள் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது.  மெல்ல மெல்ல எங்களுக்குள் விரிசல் அதிகமாகி, ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க விரும்பாத சூழ்நிலையில், சிலர் பிரிந்து  செல்லலாம் என முடிவெடுத்தோம்.  மித்ராவுக்கு அப்பொழுது தான் புரிய ஆரம்பித்தது தனது குணம் அனைவரையும் எவ்வளவு இக்கட்டில்  தள்ளி விட்டதென.  நான்சிக்கு  தான் விரும்பிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க அருமையான சந்தர்ப்பமாய் அது அமைந்தது.  மேற்கத்திய வாழ்க்கையை வரை முறை இல்லாமல் சுவீகரிதுக்குக்  கொள்ளும் எனது நண்பர்களின் மனப்பான்மை எனக்கு அபத்தமாய் பட்டது.  மேற்கத்திய கலாச்சாரத்தை பற்றிய எதிர்ப்பு மனப்பான்மை அல்ல அது.  தனது கலாச்சாரத்தை இழிவாய் நினைப்பதும், மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டாடுவதும், சரியான விஷயங்களை கற்றுக்  கொள்ளாமல்  மேற்போக்கான அர்த்தமற்ற விஷயங்களை சிலாகிக்கும் நண்பர்களின் மனநிலை சலிப்பை அளித்தது.

அப்பொழுது முடிவு செய்தேன் - போலித்தனமான கலாசார சுவீகரிப்புக்கு மாற்றாய் ஒரு அமெரிக்க குடும்பத்தில் 'paying guest' ஆக தங்குவதென.  இரண்டாவது வருடம் ஒரு எளிய அமெரிக்க குடும்பத்தோடு தங்க ஆரம்பித்தேன்.  அங்கிள் மார்கோ - ஆன்ட் ஆன்னி: இனிய தம்பதி, கல்லூரி செல்லும் வயதில் மூன்று குழந்தைகள், அழகான எளிய வாழ்க்கை.  அவர்களுடன் தங்கிய அந்த ஒரு வருடம் மிக இனிய அனுபவமாய் கழிந்தது.  வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை பரிமாறிக் கொள்ளும் நெருக்கமும், தினசரி வாழ்கையில் ஏற்படும் சவால்களை சமாளிக்க அவர்கள் தந்த ஆதரவும் என்றும் மறக்க முடியாதது.  அமெரிக்க வாழ்க்கை முறை மீது மதிப்பை உண்டாகிய சிநேகம் அது; வெளிநாட்டு வாழ்க்கையை ரசிக்க வைத்த உறவு அது.  அவர்களும் வேறு நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய முதல் தலைமுறை.  தங்கள் நாட்டு கலாச்சாரத்தை, அமெரிக்க கலாச்சாரத்தோடு சிறப்பாக ஒருங்கிணைத்து தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டிய ஆதர்ச தம்பதி.               

படிப்பு முடிந்தவுடன் பணி  நிமித்தமாக நியூ யார்க் செல்ல நேர்ந்தது.  அன்று காலை அங்கிள் ஒரு கிரே நிற சுவேட்டரை பரிசளித்தார், கலங்கிய கண்களுடன்.  அவர் கூறிய கடைசி சொற்கள், 'I am going to miss my another child'.     நான்கு வருடங்களுக்குப்  பிறகு கலிபோர்னியா செல்லும் வாய்ப்பு  அமைந்தது.    வேலைகளுக்கு நடுவில் சிறிது நேரம் எடுத்து மரணப் படுக்கையில் இருந்த அங்கிள் மார்கோ-வை காணச்  சென்றேன்.  ஆன்ட் ஆன்னி வரவேற்றார், அதே இன்முகத்துடன்.  இது போன்ற சமயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நான் அங்கிளிடம் கற்றுக் கொள்ளவில்லை.  அதற்கான தேவையும் இருந்ததில்லை.  எனது வருத்தத்தை தெரிவித்தபொழுது, ஆன்ட் ஆன்னி துக்கத்தை மறைத்துக் கொண்டே கூறினார், 'அவருடைய நேரம் வந்து விட்டது.  அவரை நன்றாக வழி அனுப்புவதை விட எனது துக்கம் பெரிதாக தோன்றவில்லை' .    

இன்னொரு முறை அப்பாவை இழக்கும் வெறுமை என்னுள் வந்தது.  விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.    


                

Tuesday, September 2, 2014

தமிழ் இலக்கிய ஈடுபாடு

இள வயதில் இலக்கிய சூழல் பெரிய அளவில் எனக்கு வாய்க்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இப்பொழுதும் உண்டு.  எனது வீட்டருகில் குடியிருந்த ஆங்கில ஆசிரியை முறையான ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனை அப்பொழுது எனக்கு இல்லை.  சங்க கால இலக்கியங்கள் தவிர வேறு ஒன்று தமிழில் இருப்பதாகவே தோன்றியதில்லை.  பொன்னியின் செல்வன் தவிர நான் வாசித்த தமிழ் புத்தகங்களும் மிகவும் குறைவு.  நவீன இலக்கியங்களோ
 அவ்வளவு சுவாரசியத்தை ஊட்டவில்லை- அந்த சமயத்தில்  அது நவீன இலக்கியத்தின் கோளாறா அல்லது எனது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் எனக்கிருந்த ஈடுபாடின்மையா என புரியவில்லை, நான் முயற்சிக்கவுமில்லை.  பொறியியல் படிப்பில் இளங்கலை முடித்தபின், இனி என்ன என எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த பொழுது, செல்வி அக்காவின் பரிச்சயம் ஏற்பட்டது.  அழகான நட்பு அது- தமிழ் இலக்கியம் பற்றியும் சமுதாய தாக்கங்கள் பற்றியும் நேரம் மறந்து பரிமாரிக் கொள்ளும் நட்பு.  அந்த வயதில் அடையாளத்தை தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கட்டுண்டுந்திருந்த  எனக்கு அந்த நட்பு நிதானத்தை கொடுத்தது. வாழ்வின் அழகியலை அழகாக எடுத்துரைத்தது.  

பின்பு அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர்ந்த பொழுது, தொலைதூர நட்பு எங்களுக்குள் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியது.     திருமணம், பின்பு அது கொடுத்த வாழ்வாதாரத்தை பற்றிய கவலை எங்களது நட்பை சற்று அதிகமாகவே பரிசோதித்து பார்த்தது.  ஆனால் செல்வி அக்கா அறிமுகப் படுத்திய இலக்கியம் இன்னும் என்னுடன் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது.  முன்பு இருந்த வேகம் இல்லை ஆனால் பயணம் தொடர்கிறது.  இன்றும் கூட அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தால், அந்த பகிர்தலும் அது கொடுக்கும் பரவசமும் எங்களுக்குள் மீண்டும் ஊற்றெடுக்கும்.  கால வெள்ளம் எல்லாவற்றையும் அடித்து செல்வதில்லை, சில நினைவுகளை கரையோரம் ஒதுக்கி விட்டு தான் செல்கிறது.