Wednesday, April 4, 2012

கனவா அல்லது நிஜமா?

காதலில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை எனலாம். தோழிகள் காதலில் விழுந்தபோதெல்லாம், அந்தச்செய்தி கடைசியாக எட்டுவது எனக்குத்தான். இத்தனைக்கும் நான் ஒரு போதும் காதலிப்பது தவறு என யாரிடமும் கூறியதில்லை. ஒருவேளை, என்னை காதல் மக்கு என நினைத்தார்கள் போலும். எனது நெருங்கிய தோழிக்கும் இதே நிலை தான்.
இதில் நாட்டமில்லாமல் பல வருடங்கள் கழிந்தது.

எப்பொழுதோ ஒருமுறை, சிக்மன்ட் பிராய்டின் காதல் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அவரது கருத்துப்படி, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, சிறு வயதிலிருந்தே சில விருப்பங்களை ஒரு கற்பனை உருவத்தின் மீது ஏற்றி, தனது ஆழ்மனதில் பதியவைத்து கொள்வதுண்டாம். பருவ வயதை எட்டும் பொழுது, எதிர்கொள்ளும் ஆணோ/பெண்ணோ அந்த கற்பனை உருவத்தை ஒத்து இருந்தால், அந்த ஈர்ப்பு காதலாய் தோன்றுவதுண்டாம். சிக்மன்ட் பிராய்டின் தீவிர ரசிகையான நான் இந்த கருத்தை ஆராதித்ததில் ஆச்சர்யம் இல்லைதானே?

நாட்கள் இப்படிசெல்ல, எனது ப்ரொஜெக்டின் தேவையாக, நியூ யார்க் செல்ல நேர்ந்தது. நான் தங்கி இருந்த வீட்டின் குடும்பத்தினர், குழந்தைகளை கோடை விடுமுறைக்காக 'தீம் பார்க்' அழைத்துச்சென்றனர்....உடன் என்னையும். நான் ப்ராஜெக்ட் செய்துகொண்டிருந்த நிறுவனத்திற்கு அருகில் அவர்களது உறவினர் ஒருவர் தங்கி இருக்க, என்னை அழைத்து வர அவரை ஏற்பாடு செய்திருந்தனர்.ஏதோ ஒரு காரணத்திற்காக, நான் ஒரு 45 வயதான மனிதரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு மங்கிய வெள்ளை நிறத்தில் ஒரு கார் அலுவலகத்திற்கு எதிரில் வந்து நின்றது. ஒரு அழகிய வாலிபர் (??)இறங்கி தயங்கியவாறே எங்கே செல்வதென யோசித்து நின்றார். எதிர்புறம் நின்றிருந்த நானும் தயங்கியவாறே கை அசைத்தேன். அதை உணர்ந்தவராய், அவரும் 'அங்கேயே நில்' என்றவாறு கை அசைத்தார்.காரை அருகில் நிருத்தியவாறு, 'மன்னிக்கவும்...இந்த இடம் எனக்கு புதிது. கூகுல் வரைபடம் சரியான முகவரியை காட்டவில்லை' என்றார். நான் மனதுக்குள், 'I'm not the only one who is directionally challenged' என எண்ணிக்கொண்டேன். ஏதேதோ பேசி கொண்டே வந்தார். நானும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்....எந்த தயக்கமும் இல்லாமல்.

அனைவரும் தீம் பார்க் சென்றோம். எனக்கு குழந்தைகளின் விளையாட்டுக்களில் விருப்பம் இல்லை. இவர் மட்டுமே அதை உணர்ந்தவராய், எனை மற்ற விளையாட்டுகளுக்கு அழைத்து சென்றார். திடீரென, உங்கள் வயது என்ன?உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும்? (அண்ணன் என அழைக்க சொல்லி விட கூடாதே என்ற கவலையுடன். இவ்வளவு அழகான வாலிபனை யார் தான் அப்படி அழைப்பார்கள்?) என கேட்டேன். என் வயது --, பெயர் ---, நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றார்.நாங்களே அறியாமல் (ஆனால், மற்றவர்களுக்கு எப்படியோ புரிய ஆரம்பித்து விட்டது) எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகி கொண்டு இருந்தது.

தீம் பார்க்விட்டு கிளம்பும் நேரம் நெருங்கியது. அனைவரும் விடை பெற்று கொண்டிருந்தனர். திடீரென, கனமழை பெய்ய தொடங்கியது. நாங்கள் இருவர் மட்டும் பார்க்கின் 'souvenir store' க்கு வெளியே நின்றிருந்தோம். உங்களுக்கு காபி வேண்டுமா? என்றார். நான் மழையை ரசித்தவாறு 'வேண்டாம்' என்றேன்.மழை எவ்வளவு அழகு....சுற்றியிருக்கும் சுமாரான விஷயங்களையும் மிக அற்புதமாக மாற்றுகிறது....மனம் பரவசத்தோடு சுகமான பாடல்களை பாடியது. கண்களை மூடி மழையின் சத்தத்தை ரசித்தேன். 'டீ' என்ற சத்தம் கேட்டு கண்களை திறந்தேன். 'ஒ , நன்றி' என்றவாறு டீயை வாங்கி கொண்டேன். எனக்கு என்ன தேவை என்பதை என்னை விட நன்கு அறிந்திருக்கிறார் என எண்ணி கொண்டேன். அருகில்....குழந்தைகள் சந்தோஷமாக சிரித்து கொண்டிருந்தனர். இந்த நிமிடம், உங்கள் உலகத்தை விட என்னுடையது மிக அழகு என பெருமை கொண்டேன்.

அப்பொழுது....பளீரென ஒரு மின்னல் 17-18 வயது மதிக்க தக்க ஒரு வாலிபன் தனது காதலை தோழியிடம் கூற, அவள் அவனை கட்டி அணைத்துக் கொண்டாள். அவன் அவளை வளைத்து இதழில் முத்தமிட்டான்....இருவரும் நெடு நேரம் மைகேல் அஞ்சேலோவின் சிற்பம் போல் நின்றனர். பலமுறை மின்னல் வெட்டியது...இருவரின் காதலையும் ஆராதிப்பதுபோல். 'Perfect moment' என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்து அவரை பார்த்தேன். நான் நினைப்பதை அவர் அறிந்து விட்டாரோ? சிக்மன்ட் பிராய்டின் கருத்தை சந்தேகிக்க தொடங்கினேன்...
இது கனவா அல்லது நிஜமா?

No comments:

Post a Comment